Thursday, June 25, 2009

மண்ணால் விலங்கு செஞ்சு.. மழை நீரில் போட்டிடுவோம்!!

அத்தை அடித்தாளோ
அரளிப்பூச் செண்டாலே
மாமன் அடித்தானோ
மல்லிகைப் பூச்செண்டாலே

என்று தாய்மார்கள் குழந்தையை தூங்கவைக்கும் பாட்டுக்கள் இன்று எங்கு கேட்க முடிகிறது ? கிராமம் முதற்கொண்டு கோலங்களும், அரசிகளும் தாய்மார்களை குழந்தைகளிடம் இருந்து வெகுவாக அன்னியப்படுத்தியிருக்கிறது

அந்தப் பாட்டை பாருங்க...

" ஆராரி ராரிரரோ
ஆரிரரி ராரிரரோ

யாரடிச்சு நீயழுத
அடிச்சாரை சொல்லியழு
என் கண்ணே நீ
கடிஞ்சாரைச் சொல்லியழு... "

இந்த வரிக்கெல்லாமே குழந்தைக அழுகை குறைச்சுடும். ஆனாலும் பாருங்க... பாட்டுல கூட குழந்தைக்கு நோகாம அடிக்கை வைக்கிற தாய்மார்கள் .. அடா அடா..

அத்தை அரளிப்பூச்செண்டாலையும், மாமன் மல்லியப்பூ செண்டாலையும் தான் அடிப்பாங்களாமா, அதுவே குழந்தைக்கு அம்புட்டு வலியெடுத்துச்சாமா... அதுக்கு என்ன தெரியுமா தண்டனை ?

தொட்டாரைச் சொல்லியழு
தோல்விலங்கு போட்டிடுவோம்
அடிச்சாரை சொல்லியழு
ஆக்கினைகள் போட்டிடுவோம்

மண்ணாலே விலங்கு செஞ்சு
மழை நீரில் போட்டிடுவோம்
வெண்ணையிலே விலங்கு செஞ்சு
வெய்யிலிலே போட்டிடுவோம்..

இல்லையா பின்ன அடிச்சது மாமனும் அத்தையுமாச்சே. இதுல வேற ஒண்ணுத்துக்கும் அடிப் போடும் வரிகளும் கூட வரும் சமயத்துக்கு ஏத்த மாதிரி

" தம்பி பாப்பா வேணுமுன்னு
தங்கமே
தானாக அழுதாயோ "

பாட்டென்னமோ குழந்தைக்குத் தான். ஆனா மெஸேஜ் மாத்திரம் கரெக்டா போக வேண்டிய இடத்துக்குப் போயிடும் ;).

எங்களைத் தூக்கி வச்சு எங்க பெரியப்பா/சித்தப்பாக்கள், மாமாக்கள்/ அத்தைகள் என அவங்க பாடின பாடல்கள் எவ்வளவோ...

"தொட்டிம் பெருமாளு
தொன்னாரிட ஒண்ணு
தோட்டி எங்க போனான்
ஊர்கணக்கன் செத்தான்
ஓலைக் கொண்டு போனான்
ஆளு எப்ப வருவான்
ஆறு நாளு ஆகும்..
அதுவரைக்கும்????

போடு தொட்டிம் தொட்டிம் "


படுத்துட்டு கால்மேல பிள்ளைய வச்சுட்டு சாஞ்சாடும்போது இந்தப் பாட்டு பாடக் கேட்டிருக்கேன். அந்த தொட்டிம் தொட்டிம்னு பிள்ளைய மேலத்தூக்கிப் போட்டு கால்ல தாங்கிப்பாங்க பாருங்க.. அப்பத்தான் தெரியும் இந்த அப்பாத்தான் நேத்து அப்படி அடிச்சது.. இப்ப பாரு பேத்தி கிட்ட கொஞ்சறதன்னு. இப்ப நினைச்சா நாளைக்கு நாமும் அப்படித்தான்னு தோணுது.

இன்னோரு பாட்டு... பாட்டி குறும்பா பாடுவாங்க. அப்ப அதோட அர்த்தமெல்லாம் நமக்குத் தெரியுமா என்ன

" பன மரமே பன மரமே
பச்சக் கண்ணாட்டி
பல்லில்லாத கிழவனுக்கு
ரெண்டு பொண்டாட்டி
ஓ யெம்மா ஓயெம்மா
வயத்த வலிக்குதே
வயித்தில இருக்கிற நாக்குப் பூச்சி
முட்டாய் கேக்குது
முட்டாய் திண்ணு தாகத்துல
தண்ணி கேக்குது
தண்ணிக்குள்ள தவக்களக்கான்
தாளம் போடுது "

ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு ராகம். எங்களுக்கு மொழிப் பழக சொல்ல வைக்கிறப் பாட்டெல்லாம் உண்டு.

"இது யாரு தச்ச சட்ட
எங்க தாத்தா தச்ச சட்ட
எங்க தாத்தா தச்ச சட்ட
பிடிச்ச பச்சை சட்ட "
இன்னும் பல இப்படி போகும் ...


மாமங்காரன் ரொம்ப நாள் பொறுத்து வந்தான்னு வச்சுக்கோங்களேன், அவனை சாக்கு வச்சு குழந்தை கிட்ட பாடற பாட்டு ஒண்ணும் உண்டு

" மாமட மாமா
மாமரம் சோலை
நீ வரும் வேளை
நீலக் கண்ணாடி
சந்தனப் பொட்டு
சரிகத் தலப்பா
உன்னுடன் பேசி
ஒரு மாசம் ஆச்சி
ஒக்காந்து பேசடா
அக்காளின் மகனே ( இங்க வேற கெட்ட வார்த்தை வரும்... கிராமத்துல அதெல்லாம் சகஜம்... நாந்தான் மாத்தி போட்டிருக்கேன் :)) )

ஹ்ம்ம்ம்.. வெறும் நினைவுகளின் கூடு மட்டுமே தெக்கி நிற்கிறது. இனியும் வருமா அந்தப் பொற்காலம்.

Sunday, June 21, 2009

என்னிரண்டு பதினாறு வயதில் எத்தனைக் கேள்விகள் ?

இந்த தடவை தொடர் கேள்விபதில்களில் சில கேள்விகள் கொஞ்சம் கே.த. ஆகத்தான் இருக்கிறதென்பது என் அபிப்ராயம். தொடங்கி வைத்த புண்யவான் எந்த புண்ணிய நதி தீர்த்தத்தை பாட்டிலில் பிடித்து அருந்திக் கொண்டிருந்த போது எழுதினாரோ தெரியவில்லை.
என்னையும் மதிச்சு ஷைலஜா அக்கா அழைத்து விட்டார்கள் ( என்னைக் கேட்டு விட்டு தான்). அவர்களுக்காக இதோ பதில்கள்.


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அப்பா வச்சாங்க, புடிக்கும்

புனைப் பெயரைக் கேக்கறதா எடுத்துக்கிட்டா - ஜீவரத்ணம் என்னோட ஜாதகப் பேர் அதன் சுருக்கம் தான் ஜீவ்ஸ்

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

கடைசியான்னா ? இனிமே அழமாட்டேன்னு அர்த்தமா ?
துன்பம் வரும் வேளையும் சிரித்துக் கொண்டிருக்க இன்னும் வள்ளுவத்தன்மை வரவில்லை எனக்கு

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்ம்ம்ம்ம்ம்.. ஆனா பிடிக்காது.
ஹெஹெ... காக்கைக்கும்....

4. பிடித்த மதிய உணவு என்ன?

அப்படி ஒன்றும் எதையும் தனித்து ருசித்து வேண்டுவதில்லை. பசி தீர நல்லுணவு எதுவும் - சைவமாய்.
(5 ஸ்டார் ஹோட்டலுக்கு போயி தயிர்சாதம் மட்டுமே சாப்பிட்ட புண்யவானைப் பாக்கனுமா... பெங்களூர் வாங்க :)) )

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

தெரியாது... சில சமயம் யெஸ்.. சில சமயம் நோ
மனிதர்களை எடைப் போட்டும் பழகுவதும், பழகிய பின் எடை போடுவதும் நிறைய நட்பை இழக்க வழி செய்துவிட்டது. தேறான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்....

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குளிக்கப் பிடிக்கும்..
கிணற்று நீரில் தத்தக்கா பித்தக்கான்னு நீச்சல் அடிச்சு குளிக்கும் சுகம் இது ரெண்டுலையும் வருமா

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அதை யாரை மீட் பண்றேங்கறதை பொறுத்தது.
ஸ்பெசிஃபிக் ஆ சொல்லனும்னா கண்... நிறைய விஷயங்கள் சொல்லிடும்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பொறுமை & நிதானம்!
சிம்பிளா சொல்லனும்னா " சோம்பேறித்தனம் "

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

வீட்டு விஷயங்களை வெளிய சொல்லக் கூடாதுங்க !
அப்புறம் அடி நீங்களா வந்து வாங்குவிங்க ?
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

வெரி பெர்சனல்!
மேலே சொன்ன பதிலுக்கான விடை தான் இதுவும் :))

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

ப்ச் இதென்னக் கேள்வி..
அப்புறம் உங்களுக்குத்தான் கஸ்டம்.. இதுமாதிரி கலர்ல ட்ரஸ் நம்ம கிட்ட இல்லையேன்னு வருத்தமா இருக்கும்
12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கடவுளே.... டைப் செய்யும் போது ஸ்க்ரீனைத்தான் பாப்பாங்கன்னு தெரியாதா ? அப்படி டைப் அடிக்கும் சத்தம் கேக்காதா ? இதெல்லாம் ஒரு கேள்வியா

அட்டுப் படம் மன்மதன் பாத்தேன்னா அடிக்க வருவீங்களா மாட்டீங்களா
13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கொஞ்சம் கொஞ்சமா கோவம் அதிகரிக்கிறது!!

அதாங்க சிவப்பு... பேனாக்களில் சிகப்பு நிறம் ரொம்ப அழகா இருக்கும்

14. பிடித்த மணம்?

சந்தனம்

மல்லிகை முல்லைன்னு இருந்தாலும் சந்தனத்தின் வாசம் இருக்கே.... அடாடா...

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன

இதுவரைக்கும் யாராரை யாராரு கூப்டிருக்காங்கன்னே தெரியல. இதுவரை அழைப்பு வராதவங்க இதையே அழைப்பா எடுத்துக்கோங்க.

ஆமா நான் கூப்ட உடனே இதோ வந்துட்டேன்னு பதில் போட்டுடுவாங்களா... :(
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
கரும்புல எந்தப்பக்கம் இனிப்புன்னு கேட்கலாமா? அக்காச்சி பதிவுல எனக்கு எல்லாமே பிடிக்கும்.

( அட்டுக்காப்பி பேஸ்டு தான் :)) )
17. பிடித்த விளையாட்டு?
" கண்டிப்பா கேள்வி பதில் தொடர் விளையாட்டு அல்ல "
செஸ் விளையாடப் பிடிக்கும்... எதிராளி தோற்பவராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே
18. கண்ணாடி அணிபவரா?

இல்லை. ( இதுவரைக்கும்... இனிமேல் கடவுள் விட்ட வழி )

( அட்டுக்காப்பி பேஸ்டு தான் :)) )

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

சிரிக்க வைக்கும் எந்தப் படமும். கமல் & க்ரேசி மோஹன் காம்பினேசன்னா உடனே

20. கடைசியாகப் பார்த்த படம்?
நினைவில்லை. ( நிஜமாத்தாங்க )

21. பிடித்த பருவ காலம் எது?
இளமைப்பருவகாலம். யாருக்குத்தான் அதுபிடிக்காது?! ( மழைக்காலம் தான் :) )

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

யூனிக்ஸ் - ஸெக்யூரிட்டி அன்ட் நெட்வொர்க்கிங்க். ( ஹ்ம்ம்ம்... பொன்னியின் செல்வனை 15 வது முறையா படிக்க ஆரம்பிச்சுட்டேன் )

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

விருப்பத்தைப் பொருத்து. ( எப்போ ஜெயஸ்ரீ புதுசா வேற படம் எடுக்கிறேனோ அப்போ )

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

குழந்தையின் சிரிப்பு
குழந்தையின் அழுகை ( உண்மைதான்... குழந்தையின் அழுகை எவ்வளவு பெரிய துயரம் தெரியுமா )

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா போனேனே .. ( கிலோ மீட்டர் கணக்கெல்லாம் கேக்க மாட்டீங்க தானே )

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
திறமை இருக்கான்னே தெரியல, இதுல தனித்திறமைன்னு ஜோக் அடிக்கணுமா?
ஏதோ தெரிஞ்சதை தோணினதை எழுதிட்டு இருக்கேன் பார்த்ததை வரைவேன் சுமாரா.
மத்தவஙக் என்ன சொல்வாங்களோன்னு கவலைப்படாம பாடுவேன்
கலகலப்பா பேசவிரும்புவேன் போன்லபேசினா கூட எதிர்முனைல இருக்கறவங்களை சின்னபுன்னகையாவது வரவழைக்காமல் பேச்சை நிறுத்தமாட்டேன் இதெல்லாம் திறமையா என்ன பழக்கம்னு சொல்லலாம்
( இதுவும் அக்கச்சி பதிவுல இருந்து கட் காபி பேஸ்ட் தான். ஆனாலும் உண்மை )


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

தன்னை மட்டுமே உயர்வாய் கொண்டு மற்றவர்களைத் தரம் தாழ்த்துபவர்கள்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
"நான்"
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

அழகிய சிற்பங்கள் நிறைந்த எந்த இடமும்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

யாருக்கும் பாரமில்லாம, யாருக்கும் தொந்தரவு தராம

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி செய்ய விருப்பம் இல்லை இதுவரை!

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை என்பது வழிப்பயணம். தொடர்வதில் வேண்டும் நல் கவனம்

Wednesday, June 03, 2009

தேவதைகளும், சாபங்களும் இன்னும் பிறவும்!

உள்ளமும் கண்களும் ஸ்ரீராமைத் தேடிக்கொண்டிருக்க மாலதி
"உஷா நர்ஸ், கொஞ்சம் வாங்களேன். ப்ளீஸ் " என்று மருத்துவமனையில் பொது வார்டில் இருந்து நர்ஸை அழைத்தாள் மாலதி. அவள் குரலில் வலி அப்பட்டமாய் தெரிந்தது.

ஸ்ரீராம் வந்தானா? படுக்கையில் இருந்து மறுபடி எழுந்து உட்கார முயற்சித்ததால் அடிவயிற்றுக்கு கீழே சுரீர் என்று வலி எழுந்தது.

" ஏம்மா உனக்கு ஒரு முறை சொன்னாப் புரியாது ? ஆறு தையல் போட்டிருக்கும்மா. ப்ளட் ரொம்ப போயிருக்கு. படுத்திருக்கனும் நாங்க சொல்ற வரைக்கும். இல்லாட்டா நின்னு போன இரத்தம் மறுபடி போக ஆரம்பிக்கும் ரொம்ப க்ரிடிகல் ஆகிடும்."

நர்ஸ் ஓடி வந்து கத்தினாள் மறுபடி மெதுவாய் படுக்க வைத்தாள்.

" சாரி நர்ஸம்மா, நான் குடுத்த நம்பருக்கு போன் பண்ணிச் சொன்னீங்களா "

" பண்ணேன்மா. செக்யூரிட்டி எடுத்தாங்க. உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லிடறதா சொன்னாங்க. மைனர் ஆக்ஸிடன்ட் ஆனதா தான் சொல்லிருக்கேன்"


" மொபைல்ல ட்ரை பண்ணுங்களேன். ப்ளீஸ்"
" மொபைல் ரிங்க் ஆகுது யாரும் எடுக்கலைம்மா "

வழக்கமாக ஆறுமணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்து வீடுதிரும்புபவள் தோழியின் வற்புறுத்தலால் அவளுடன் ஷாப்பிங் போய்விட்டு திரும்பிய போது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்து போனது. ஒன்பது மணி அளவில் அந்த சந்தில் திரும்பும்போது சட்டென்று தெருவிளக்கு படார் என்று வெடிச் சத்தத்துடம் அணைந்து போனது. யாரோ கல்லெறிந்து உடைத்திருக்கிறார்கள். சாராயவாடை ரொம்ப நெருக்கமாய் தெரிந்தது. மூன்று அல்லது நான்கு பேர் தன்னை சுற்றி இருப்பதை உணர்ந்தாள். விதி, கழுத்தில் கத்தியை வைத்து நகையைக் கேட்டவர்கள் நகையோடும் வண்டியோடும் மட்டும் போயிருந்தால் பரவாயில்லை.

மயக்கம் தெளிந்த போது ஆஸ்பத்திரியில் இருந்தாள்.

" சரிங்க நர்ஸம்மா.. எதுக்கும் இன்னோரு முறை ட்ரை செய்யுங்களேன் ப்ளீஸ் "

இன்னும் ஏன் ஸ்ரீராம் வரவில்லை. ஒருவேளை விஷயம் தெரிந்து வெறுத்து விட்டானா ? செத்துப் போகட்டும் என்று விட்டு விட்டானா? அவ்வளவு தான் எங்களின் காதலின் வலிமையா ? உறவுகளெல்லாம் மறுத்து வந்து இவனையே நம்பி வந்தேனே அதற்கு இது தான் பரிசா ?
யோசித்தலின் நினைவுகளின் வலியும் உடல்வலியும் மனவலியும் சேர்ந்து அவளை உறக்கம் கலந்த மயக்க நிலைக்கு மறுபடி தள்ளியது.
**

இளஞ்சூடான நீர்த்துளிகள் மேல் பட கண் விழித்தாள் மாலதி. ஸ்ரீராம் அருகில் அமர்ந்திருந்தான். பொது வார்டில் இருந்து தனி வார்டுக்கு ஸ்ரீராம் அவளை மாற்றி இருந்தான்.

" ஸ்ரீராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்ம்ம்... " அழுகையாய் வெடித்தாள் மாலதி.
" சாரிடா, நேத்து பன்னென்டு மணியாகியும் நீ வீட்டுக்கு வரலைன்னதும் எங்கல்லாம் தேடினேன். உன் ஃப்ரண்டு அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்க. இந்த பதட்டத்துல மொபைல் கூட கைல எடுத்துட்டு போகலை. போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் குடுத்துட்டு வீட்டுக்கு வந்தா ஆஃபீஸ் ல இருந்து நிறைய மிஸ்டு கால். போன் பண்ணிக் கேட்டதுல நீ இங்க அட்மிட் பண்ணிருக்கறதா சொன்னாங்க " விம்மினான்.

" எல்லாம் போச்சு ஸ்ரீராம். இனிமே உன் மூஞ்சில எப்படி முழிப்பேன்" கதறினாள்.
" சரி சும்மா அழுது உடம்பைக் கெடுத்துக்காதே. எல்லாம் சரியாய்டும். உடம்புல வேற எங்கயாச்சும் அடிபட்டா ஆபரேஷன் பண்ற மாதிரின்னு நினைச்சுக்கோ"

ஆதுரமாய் அவளை தாங்கினான்.
" சார் அவங்க உடம்பால மனசால ரொம்ப வேதனைப் பட்டிருக்காங்க. படுபாவிங்க எப்படி சிதைச்சிருக்கானுங்க. ஆறு தையல் சார். தெய்வமே, அவனுங்க நாசமா போக" நர்ஸ் சாபமிட்டாள்.

"அவங்களுக்கு முழு ரெஸ்ட் தேவை சார் அதிகம் பேசி அவங்களை தொந்தரவு செய்யாதீங்க " தூங்க மருந்து கொடுத்துவிட்டு ஸ்ரீராமிடம் சொல்லி விட்டு நர்ஸ் சென்றுவிட்டாள்.

இரவில் விழிப்பு தட்டியது மாலதிக்கு. எழ முயற்சித்தாள். ஸ்ரீராம் உட்கார்ந்த படியே தூங்கிக் கொண்டிருந்தான். இவள் அசைவை உணர்ந்ததும் ஸ்ரீராம் விழித்துக் கொண்டான்.

" எதாச்சும் வேணுமா மாலதி "

" இல்லை வேண்டாம் ஸ்ரீராம் நீ தூங்கு. நான் படுத்துக்கறேன்" மறுபடி கண்மூடி படுத்துக் கொண்டாள்.

கண்ணில் நீர் முட்டியது. என்னைத் தேடி தாமதமாக வந்ததற்கு இவனையா சந்தேகப்பட்டேன். தவம் செய்தாலும் கிடைக்காத அருமையான புருஷன் கிடைத்திருக்கிறானே. இவ்வளவு பாசம் கொண்டவனுக்க இனி நான் ஏற்றவளா?. இன்று இல்லையென்றாலும் எதிர்காலத்தில் ஏதாவது குத்தல் பேச்சு வந்தால் தன்னால் தாங்க முடியுமா ? மனதுக்குள் குமைந்தாள் மாலதி.

நான் கல்லாய் மாறிடக் கூடாதா? கோமா ஸ்டேஜ் கூட ஏறக்குறைய கல் போன்று உணர்ச்சியற்று தானே கிடக்கும். என்னை ஏன் கடவுள் இப்போதே அழைத்துக் கொள்ளக் கூடாது. குறைந்த பட்சம் கோமா ஸ்டேஜிலாவது ஏன் நான் இருக்கக் கூடாது. ஸ்ரீராம் வேறு நல்லப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ளட்டும் அதற்கு நான் சாகவேண்டும் நான் சாகவேண்டும். நான் சாகவேண்டும் இடைவிடாது அதையே நினைத்தாள் மாலதி! மெல்ல மெல்ல நினைவு தப்பியது.
***

"சார் உங்க வைஃப் கண்ணைத்திறந்து பாக்கறாங்க, எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மென்ட் வேலை செஞ்சுடுச்சு. இனி பயமில்லை பொழச்சிடுவாங்க" டாக்டரின் குரல் காதில் விழுந்தது. மாலதி கண்விழித்த போது ஸ்ரீராமின் அழுது வீங்கியக் கண்கள் தான் கிடைத்தது!


"நன்றி டாக்டர். திடீர்னு நான் சாகனும் நான் சாகனும்னு இவ பினாத்தினது கேட்டுட்டு உலுக்கினா பதிலே இல்லை. நீங்க மட்டும் அப்ப வராம இருந்திருந்தா என்ன கதி. உங்களை என் லைஃப்ல மறக்கவே மாட்டேன் டாக்டர் "

"இட்ஸ் ஆல்ரைட் ஸ்ரீராம். இது கொஞ்சம் சீரியசான அட்டாக் தான். சரியான நேரத்துல கவனிச்சதுல காப்பாத்த முடிஞ்சது. அவங்க மனசு கஸ்டபடாம பாத்துக்கோங்க அதான் ரொம்ப முக்கியம்"
டாக்டர் சொல்லிவிட்டு வெளியேப் போனார்

" ஏன்டா என்னை பொழைக்க வச்சே, நான் உனக்கு இனி லாயக்கு இல்லை. என்னைக் கொன்னுடு. இனிமே நான் இருக்க மாட்டேன். என்னைக் கொன்னுடுடா ஸ்ரீராம்" அழுதாள்.

" உஷ்... மாலதி என்ன இது சின்னப் புள்ளை மாதிரி. நானே ஒரு ஆக்ஸிடென்ட்ல மாட்டி எனக்கு கையோ காலோ போயிருந்தா என்னை கொன்னுடுவியா நீ "

" அதுவும் இதுவும் சமமா "
" ஆமா என்னைப் பொருத்தவரைக்கும் ரெண்டும் சமம் தான். பைத்தியம் பைத்தியம். நீ போயிட்டா நான் மட்டும் உயிரோட இருப்பேன்னு நினைச்சிட்டு இருக்கியாக்கும். இனிமே இது மாதிரி சாகறேன் அது இதுன்னு எதாச்சும் பண்ணே உனக்கு முன்னாடி நான் போய் சேர்ந்துடுவேன்" கண்ணில் வழிந்த நீரை புறங்கையில் துடைத்தான்.

"இனி அப்படி செய்யமாட்டேன் ஸ்ரீராம். பட் இந்த என் உடம்பு இனிமே வெறும் கல் மாதிரி. என் மனசு முழுக்க எப்பவுமே உனக்கு மட்டும் தான். ஆனா இனிமே இந்த உடம்பை நீ உபயோகிக்கக் கூடாது. இது உன் மேல என் மேல சத்தியம்" என்றாள் மாலதி.

"கமான் பேபி. எல்லாம் சரியாய்டும். அழாதே. கூல்டவுன்." ஸ்ரீராம் தொடர்ந்து அவளை ஆறுதல் செய்துக் கொண்டிருந்தான்.
***


"உம். சொல்லு பாட்டி. ஏன் பாட்டி அகலிகை கல்லாப் போனா?"

" அதா கொழந்தே. இந்திரனைப் பாத்ததும் அவன் மேல ஆசைப்பட்டு அகலிகை மனசால கெட்டுப் போய்ட்டா. அதனால அவ தனக்குத் தானே தண்டனை குடுத்துக்கற மாதிரி.. கல்லு மாதிரி இருந்து தவம் செய்துட்டு இருந்தா"

"அய்யோ பாவம்" சூள் கொட்டிய பெண் குழந்தை குரலுக்கு ஒரு ஏறக்குறைய பன்னிரண்டு வயது இருக்கலாம்!
" அப்ப கவுதமர் சாபம் உடலையா "
"இல்லைக் கண்ணு. அவரு சொன்னாரு அகல்யா, உடலால மாசுபடுதல் வேறு மனசால மாசு படறது வேற. மனசால செய்யறது தான் நம் இச்சையோட செய்யறது. அதான் உண்மையான குற்றம். உணர்ந்து திருந்திடனும் உடனே. இருந்தாலும் நீ கல்லு மாதிரி எல்லா இச்சையும் மறந்து தவம் செய்யறதா சங்கல்பம் பண்ணிட்ட்ட இல்லையா. அதனால, ராமன் இங்க வரும் வரைக்கும் நீ தவம் இரு போதும் அப்படின்னார் கவுதமர் "

" அப்போ வேறவங்க மேல ஆசைப் படறது தப்பா பாட்டி "

"அப்படி இல்லை ராசாத்தி. ஆசை படறதுல இல்லை தப்பு. ஆனா துராசை தப்பு. கமிட்மெண்ட். உனக்கு நான் எனக்கு நீன்னு கமிட்மெண்ட் ஆனப்புறம் அதை ப்ரேக் பண்றது ப்ரீச் ஆஃப் காண்ட்ராக்ட் மாதிரி இல்லையா. நம்பிக்கைக்கு செய்ற துரோகம் இல்லயா கண்ணு?. அதை உணர்ந்ததும் தான் அகல்யா தானா ஒரு முடிவெடுத்தா "

" கவுதமர் தான் உணர்ந்து திருந்திட்டா எல்லாம் சரியாய்டும் சொல்றாறே அப்புறம் எதுக்கு அகலிகை இதுமாதிரி தவம் செய்யனும் "
" அவளுக்குள்ள இருக்கிற குற்ற உணர்ச்சி அவளை செய்யத் தூண்டுது "
" இந்தக் காலத்துல இது மாதிரி எல்லாம் ஆகுமா பாட்டி, இப்படியும் பெண்கள் இருக்காங்களா "
"இந்தக் காலம்னு இல்லை எல்லா காலத்திலயும் பெண்களின் மன உறுதிக்கு ஈடா எதுவுமே இல்லைம்மா "


"சரி சரி. அப்புறம் இராமன் வந்தானா பாட்டி அகலிகை கிட்ட "

" ஓ வந்தானே "

பக்கத்து பெட்டில் கால் முறிவிற்காக அட்மிட் செய்து படுத்திருந்த வயதான பாட்டி தன் பேத்திக்கு கதை மூலம் வாழ்கையை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது மாலதியின் விசும்பலின் ஊடே மெலிதாகக் கேட்டது!
***

மறுநாள் காலையில் மாலதி இறந்துவிட்டதாகவும், மாலதியின் மரணம் பற்றி போலீஸ் ஸ்ரீராமை விசாரித்துக் கொண்டிருந்தது. சிலர் அதை தற்கொலை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
***


உரையாடல் சமூக இலக்கிய அமைப்பு நடத்தும் போட்டிக்காக

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்